சுட்டெரித்த வெயில் வீண்போகவில்லை: 1.77 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரித்து சென்னை மாநகராட்சி சாதனை


சென்னை: சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அதிகபட்சமாக 1.77 லட்சம் யூனிட் சூரியஒளி மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உற்பத்தி செய்யப்படும் அனல் மின்சாரம், அணு மின்சாரம் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான சூரியஒளி மின்சாரம் மூலம் மின்னுற்பத்தி செய்து பயன்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

இதைத் தொடர்ந்து, 2017-ம் ஆண்டு ரூ.30 கோடி செலவில் மாநகராட்சி அலுவலகங்கள், பள்ளி கட்டிடங்கள், மருத்துவமனை கட்டிடங்கள் என 662 கட்டிடங்களில் சூரியஒளி மின்சார உற்பத்தி கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதன்மூலம் மாநகராட்சிக்கு சராசரியாக ஒரு மாதத்துக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் மின் செலவு குறைந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், சூரியஒளி மின்சார உற்பத்தியும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும்1.77 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து, பயன்படுத்தப்பட் டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமாக அக்டோபர் முதல் ஜனவரி வரை சுமார் 1.50 லட்சம் யூனிட் வரைதான் சூரியஒளி மின்சாரம் உற்பத்தியாகும். இந்த கோடைகாலத்தில் கடும் வெயில் காரணமாக அதிகபட்சமாக 1.77 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது. இதனால், கடந்த ஏப்ரல் மாத மின் கட்டண செலவு ரூ.16 லட்சம் வரை குறைந்துள்ளது.

உலக அளவில் சூரியஒளி மின்னுற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி, இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதில் சென்னை மாநகராட்சியும் பங்களித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.