வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கு: நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி. ஆஜர்


வேலூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்.

வேலூர்: கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் எம்பி இன்று ஆஜராகினார்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கதிர் ஆனந்துக்கு நெருக்கமான திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், தாமோதரன் என்பவருக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் இருந்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.10.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், வாக்குச்சாவடி விவரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டு கட்டுகள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் அப்போதைய தேர்தல் கணக்கு அலுவலர் சிலுப்பன் அளித்த புகாரின் பேரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜெ.எம் 1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சத்தியகுமார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இன்று (ஜூன்-20) ஆஜரானார். அப்போது, வழக்கை வரும் ஜூலை 15-ம் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.