திருவண்ணாமலைக்கு கோயம்பேட்டில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்


சென்னை: விழுப்புரம் போக்குவரத்துக் கழகம்சார்பில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆற்காடு, ஆரணி வழியாக44 பேருந்துகளும், காஞ்சிபுரம், வந்தவாசிவழியாக 11 பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை செல்லும் பயணிகளில் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு சந்தை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்துவருகின்றனர். திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க அவர்கள் வைத்தகோரிக்கையை ஏற்று மே 23 முதல் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு நாள்தோறும் கூடுதலாக 30 பேருந்துகள் சேர்த்து மொத்தம் 85 பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோல, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும். எனவே, பயணிகள் பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.