அறங்காவலர் நியமனத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது? - அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி


சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் அறங்காவலர் நியமனத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை ஏன் நியமிக்கக் கூடாது என அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அறநிலையத் துறைதரப்பில் தமிழகம் முழுவதும் உள்ள 31,163 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், 10,536 கோயில்களில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 6,814 கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 3,749 கோயில்களில் அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறைகள் நடந்துவருகின்றன. நிலுவை வழக்குகள் உள்ளிட்ட காரணங்களால் 4 ஆயிரம் கோயில்களில் அறங்காவலர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 20 ஆயிரம்கோயில்களின் அறங்காவலர் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை என விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அறங்காவலர் நியமனம் தொடர்பான பணிகளை அறநிலையத் துறை அதிகாரிகள் இன்னும் முடிக்காததால், இந்த நியமன பணிகளை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை ஏன் நியமிக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர்.

பின்னர் அறங்காவலர்கள் நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை சமர்ப்பிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு (ஜூன் 21) தள்ளிவைத்துள்ளனர்.

இந்நிலையில் கோயில்களில் தக்கார்களாக நியமிக்கப்பட்டுள்ள அறநிலையத் துறை அதிகாரிகளை நீக்கக் கோரியும் தக்கார்கள் பணிநியமனம் தொடர்பான தகுதியை நிர்ணயிக்க கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தவழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

x