மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முயற்சியை கைவிட கோரிக்கை: திருப்பூரில் தண்டோரா போராட்டம்


திருப்பூர்: மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பாக, இன்று (ஜூன் 19) தண்டோரா முழக்கப் போராட்டம், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் நடந்தது.

இதில் நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதன் மூலம் 3500-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர் பணியிடங்கள் ஒழிக்கப்படும் அபாயம் உள்ளது. சுங்கச்சாவடி அமைத்து தனியார் மூலம் சுங்கவரி வசூலிக்க அனுமதிக்கக்கூடாது. எனவே மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.

கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் வேலை வழங்கிட வேண்டும். நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு என்று சொல்லி, நிரந்தர பணியிடங்களை ஒழிக்க கூடாது. ஓய்வு பெற்ற ஊழியர்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ளக் கூடாது, இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கக்கூடாது.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டோரா அடித்து கோரிக்கை முழக்கம் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் திருப்பூர், தாராபுரம், கரூர், ஈரோடு கோட்டங்களை சேர்ந்தோர் பங்கேற்றனர்.