விதிகளை மீறி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி தீவிரம்


கோப்புப்படம்

சென்னை: மும்பையில் புழுதி புயலால் விளம்பரப் பலகை விழுந்து 16 பேர்உயிரிழந்த நிலையில், சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மும்பையில் கடந்த 13-ம் தேதி புழுதிப் புயல் வீசியது. இதில் அந்த மாநகரின், காட்கோபர் செட்டாநகர் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த 120 அடி உயர ராட்சத விளம்பரப் பலகை பெட்ரோல் பங்க் மீது விழுந்தது.

இதில் சிக்கிக்கொண்ட 16 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாநகராட்சி நிர்வாகம் நடத்திய விசாரணையில் அந்த விளம்பரப் பலகை,மாநகராட்சி அனுமதி இன்றி வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மணிக்கு 50 கிமீ வேகம் வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றுமாறு மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. மும்பைபுழுதி புயல் சம்பவத்துக்குப் பிறகு இப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 460 விளம்பரப் பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. அதில் 30 அடி உயரத்துக்கு மேல் வைக்கப்பட்டிருந்த 250 விளம்பரப் பலகைகள் அஸ்திவாரத்தோடு அகற்றப்பட்டுள்ளன.

சென்னையில் விளம்பரப் பலகைகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. தற்போதுள்ள அனைத்துவிளம்பரப் பலகைகளும் விதிகளை மீறி வைக்கப்பட்டவைதான். அவற்றை அகற்றி வருகிறோம்.

ரூ.200 கோடி வருவாய்: உரிய அனுமதி பெற இதுவரை 1,100 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 40 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மற்றவற்றுக்கு உரிமம் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.30 கோடி வரை வருவாய் கிடைக்கும்.

அரசு கட்டிடங்களில் விளம்பரப் பலகைகள் வைத்து வருவாய் ஈட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் மாநகராட்சிக்கு ரூ.200 கோடி வரை வருவாய் கிடைக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.