கோடை விடுமுறைக்கு பின் அணுசக்தி பள்ளிகள் திறப்பு @ கல்பாக்கம்


பள்ளிகள் திறப்பு

கல்பாக்கம்: கல்பாக்கம் நகரியப் பகுதியில் அமைந்துள்ள மத்திய அணுசக்திதுறையின் கீழ் இயங்கும் அணுசக்தி பள்ளிகள், கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று (புதன்கிழமை) திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அணுமின் நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் பணிபுரியும் ஊழியர்கள் நகரியப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் தங்கி பணிக்குச் சென்று வருகின்றனர்.

மேலும், ஊழியர்களின் குழந்தைகளுக்காக நகரியப் பகுதியில் மத்திய அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் அணுசக்தி பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில், அணுசக்தி துறை ஊழியர்களின் பிள்ளைகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த அணுசக்தி பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து, மாணவ, மாணவியர் சீருடை அணிந்து பள்ளிக்கு உற்சாகத்துடன் சென்றனர். மேலும், புதிய மாணவர்களும் பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளி வகுப்பறையில் தங்கள் நண்பர்களை மீண்டும் சந்தித்த மாணவ, மாணவியர் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் அணுபுரம் பகுதியில் உள்ள அணுசக்தி பள்ளியும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.