தமிழக ஆளுநர் மகள் திருமணம் கோலாகலம்; உதகை ராஜ்பவன் திருவிழா கோலம் பூண்டது


உதகை ராஜ்பவன்

தமிழக கவர்னர் மகளின் திருமணத்துக்காக உதகை ராஜ்பவன் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் மகளின் திருமணம் பிப்.21, 22 தேதிகளில், உதகையில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதை முன்னிட்டு திருமண முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கோவையில் இருந்து உதகை வந்து, ராஜ்பவனில் தங்கியுள்ளார்.

இன்றும் நாளையும் திருமண நிகழ்ச்சிகள் நடப்பதால், ராஜ்பவன் முழுதும் புதுப்பிக்கப்பட்டது. பச்சை நிறமாக இருந்த ராஜ்பவன் மாளிகை, சென்னை ராஜ்பவன் போல் முழுமையாக வெண்ணிறமாக மாற்றப்பட்டது.

திருமணத்துக்காக ராஜ்பவன் முழுதும் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. நுழைவு வாயில்களில் தென்னங்கீற்று, வாழை, பாக்கு மரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு வந்துள்ள விருந்தினர்கள், தனியார் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். அவர்கள் ராஜ்பவன் சென்றுவர 30-க்கும் மேற்பட்ட சொகுசு வாகன போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமணத்தை முன்னிட்டு ராஜ்பவன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசு தாவரவியல் பூங்காவிலேயே தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு, வாகன தணிக்கை செய்யப்படுகிறது.

x