கருணாநிதி போல் பொய் சொல்லித்தான் ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்: முன்னாள் அமைச்சர் தங்கமணி


முன்னாள் அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காட்டூர், விட்டலபுரி பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான தங்கமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

“உள்ளாட்சி தேர்தல் என்பது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரும் தேர்தல். நான் அமைச்சராக இருந்தபோது யாராலும் செய்ய முடியாத அளவுக்கு, அரசு கலைக் கல்லூரி, தீயணைப்பு நிலையம், சாலை வசதி, சேலம் சாலை முழுதும் அகலப்படுத்தப்பட்டு புதிய மின் விளக்குகள் அமைக்கும் பணி 15 கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டது.

விட்டலபுரி சாலை மட்டும் நிலுவையில் உள்ளது. ஆட்சி மாற்றம் என்பதால் அதிகாரிகள் செய்ய மறுத்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை பார்ப்பேன். அவர்கள் செய்யாவிட்டால் என் எம்எல்ஏ நிதியில் இருந்து நான் செய்துதர உள்ளேன்.

ராஜாஜி குப்பம் பகுதியில் உள்ளவர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா வழங்கப்படாமல் இருந்தது. முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு என்னிடம் சொல்லியதும் அதற்கான ஏற்பாடுகள் செய்து அனைவருக்கும் பட்டா வழங்கப்பட்டது. நாங்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி தருகிறோம்.

முதியோர் உதவி தொகை, மின் இணைப்பில், குடிநீர் வரியில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் உடனுக்குடன் செய்து தரப்பட்டன. நகரில் உள்ள அனைத்து சாலைகளும் 6 கோடி ரூபாய் நிதி பெற்று புதிய தார் சாலைகளாக போடப்பட்டன. உள்ளாட்சியில், நல்லாட்சி இருக்க வேண்டும் என்றுதான் இன்று அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வந்துள்ளோம்.

திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுவதுதான் அவர்கள் வாடிக்கை. சட்டமன்றத்தில் ஜெயலலிதா, கருணாநிதியிடம் 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னது என்ன ஆனது? என்று கேட்டதற்கு, கருணாநிதி சொன்ன பதில், மக்களுக்கு என் மனதில் இடம் தந்துள்ளேன் என்பது தான். அதுபோல் தான் அவரது மகனும் பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சி செய்து வருகிறார்.

நீட் தேர்வு ரத்து செய்து விடுவோம், எங்களிடம் ரகசியம் உள்ளது, சூட்சுமம் உள்ளது, எப்படியும் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்றார்கள். 10 மாதங்கள் ஆன நிலையில் 4 மாணவிகள், 2 மாணவர்கள் இறந்ததுதான் மிச்சம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்றார்கள். 10 மாதங்கள் ஆகியும் தரவில்லை. கேட்டால் இன்னும் 4 ஆண்டு ஆட்சி உள்ளது. தருவோம் என்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று சொல்லி, பெட்ரோலுக்கு 3 ரூபாய் குறைத்தார்கள், ஆனால் டீசலுக்கு குறைக்கவில்லை. மத்திய மோடி அரசு குறைக்கவில்லை, நாங்கள் என்ன செய்வது? என்று சொல்லி விட்டார்கள். பெட்ரோலுக்கும், டீசலுக்கும் குறைத்த மத்திய அரசு, தமிழகத்துக்கு மட்டும் குறைக்கவில்லை. கொடுத்த வாக்குறுதி போல் 4 ரூபாய், 5 ரூபாய் என்று சொன்னது போல் அதையாவது குறைத்து இருக்கலாம். அதையும் குறைக்கவில்லை.

ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் சொன்னார்கள். அனைவரும் 5 பவுன் நகை அடகு வையுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்து விடுவோம். வந்ததும், நகைக்கடன் தள்ளுபடி செய்து விடுவோம், என்றார்கள். 10 மாதங்கள் ஆகியும் இன்னும் அடமானத்தில்தன் நகைகள் உள்ளன, வெளியில் வந்த பாடில்லை. கேட்டால் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் என்றும், போலி நகை, அப்படி, இப்படி என்றும் மழுப்பி வருகிறார்கள். இவர்கள் சொன்னதை நம்பி 43 லட்சம் பேர் நகைக்கடன் வைத்து தவித்துக் கொண்டுள்ளனர்.

ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களை கொண்டு வந்தார்களோ அந்த திட்டங்களை நிறுத்துவதுதான் இவர்களின் குறிக்கோளாக உள்ளது. கூடிய விரைவில் அம்மா உணவகத்தை நிறுத்தப் போகிறார்கள். கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்வோருக்கு 25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டி கொடுத்தோம். இப்போது அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். கேட்டால் பஸ் பாஸ் கொடுத்து விட்டோம். அவர்கள் பஸ்ஸில் சென்று விடுவார்கள் என்று கூறி வருகிறார்கள்.

இலவச பஸ் பாஸ் கொடுத்தது என்ன ஆனது என்றால், 10 பஸ் ஓட வேண்டிய இடத்தில் 5 பஸ்தான் ஓடுகிறது. நான் பிரச்சாரத்துக்கு வரும் போது பார்த்தேன். பள்ளிபாளையம் சாலையில், சானார்பாளையத்தில் 3 பெண்கள் கையை காட்டுகிறார்கள். ஆனால் பஸ் நிற்காமல் சென்று விட்டது. இலவசம் என்பதால் அப்படி செய்து வருகிறார்கள். அடுத்த தனியார் பஸ் வந்தால்தான் ஏறிப் போக முடியும்.

மீண்டும் பொய் சொல்லி உள்ளாட்சியிலும் வந்துவிட்டால், மக்களை ஏமாற்றலாம் என்று எண்ணிக் கொண்டுள்ளனர். உங்கள் பகுதியில் லைட் எரியவில்லை, தூர் வாரவில்லை, சாலை பழுது, குடிநீர் வரவில்லை என்று சொன்னால் அதை கொண்டுவரக்கூடிய முதல் நபர் உள்ளாட்சி தேர்தலில் உங்களால் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர் தான். வல்லவர்களை தேர்வு செய்யுங்கள். அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தால், எந்த திட்டமாவது செயல்படுத்த நிதி போதவில்லை என்று சொன்னால், எனது எம்எல்ஏ நிதியில் இருந்து நிதி வழங்கி பணிகளை செய்து தருவேன்.”

இவ்வாறு அவர் பேசினார். அப்போது நகர அ.தி.மு.க. செயலர் நாகராஜன், துணை செயலர் திருநாவுக்கரசு, மாரிமுத்து, ராஜா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

x