திடீர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 645 கனஅடி நீர்வரத்து


திருவள்ளூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 645 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. கன மழை, மிதமான, லேசான மழை என கொட்டித் தீர்த்த மழையால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 645 கன அடி வந்துகொண்டிருக்கிறது. அதேபோல் புழல் ஏரிக்கு விநாடிக்கு 106 கன அடியும், பூண்டி ஏரிக்கு 50 கன அடியும் மழை நீர் வந்துகொண்டிருக்கிறது. மேலும், சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 43 கன அடியும், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 15 கன அடியும் நீர் வந்து கொண்டிருக்கிறது.

தற்போது, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,666 மில்லியன் கன அடியாகவும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,922 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

அதேபோல் 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 89 மில்லியன் கன அடியாகவும் 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 116 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகையின் நீர் இருப்பு 313 மில்லியன் கன அடியாகவும் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.