சசிகலா ‘என்ட்ரி’ கொடுக்க முடியாது: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்


சென்னை: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொதுமக்களை பட்டியில் அடைத்தது போன்று அடைத்து, ஜனநாயக படுகொலையை திமுக செய்தது. தேர்தல் ஆணையத்தால் நேர்மையான தேர்தலை நடத்தினால் நாங்கள் போட்டியிட தயார். தேர்தல் ஆணையத்தால் தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என உறுதியளிக்க முடியுமா? அதனால் தான் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம். அதிமுக எப்போதும் புறமுதுகு காட்டுவதில்லை. இக்கட்சி புறநானூற்றுப் படை.

சசிகலாவும், அவரது குடும்பமும் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர்கள். சசிகலாவை மட்டும் ஜெயலலிதா திரும்ப சேர்த்துக் கொண்டார். அவர் கட்சியிலேயே இல்லை. அவருக்கும் அதிமுகவும் எந்த சம்பந்தமும் இல்லை. தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத சசிகலாவை பொதுமக்கள் எப்படி ஏற்பார்கள். எக்சிட் ஆனவரால் என்ட்ரி கொடுக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் ஒரு குறுநாவல் என்றார்.