இரு வடமாநில இளைஞர்கள் குழுக்கள் இடையே தாக்குதல்: திருப்பூர் ரயில் நிலையம் அருகே பரபரப்பு


திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தின் சரக்கு ஏற்றும் மையம் அருகே வடமாநில இளைஞர்கள் இரு குழுவாக பிரிந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாநகரில் பல லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிமித்தமாக திருப்பூருக்கு ரயிலில் வந்து செல்வது வாடிக்கை. அதனால் ரயில் நிலைய பகுதியில் எப்போதும் வடமாநிலத் தொழிலாளர்கள அதிகளவில் வலம் வந்து கொண்டிருப்பார்கள். இந்நிலையில், இன்று வடமாநிலத் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இதைப் பார்த்த அப்பகுதியினர் திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் சென்றுள்ளனர். ஆனால், போலீஸார் வருவதை அறிந்த வடமாநில இளைஞர்கள் அங்கிருந்து தப்பினர். போலிஸ் விசாரணையில், ரயிலில் வந்த வடமாநில இளைஞர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்தது. வடமாநில இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.