கள்ளக்குறிச்சி நகராட்சிக் குப்பை கிடங்கில் தீ விபத்து


கள்ளக்குறிச்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சிக் குப்பை கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 5 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 21 வார்டுகளிலும் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கள்ளக்குறிச்சி நகர முகப்பு பகுதியான தியாக துருகம் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைக் கிடங்கு அருகே மணி முத்தாறும் உள்ளது. இந்த நிலையில் அங்கு குப்பையை தரம் பிரித்து, அவற்றை பயனுள்ளதாக மாற்றும் வகையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அவை தரம் பிரிக்க நகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர்களை நியமித்துள்ளது.

ஆனால் அந்த பணி மந்தமாக நடைபெறுவதால், நாளுக்கு நாள் குப்பை அதிகரித்து, திறந்தவெளியில் சேகரிக்கப்படும் குப்பைகளால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்வோர் மிகுந்து துர்நாற்றத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த நிலையில், திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பையில் நேற்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால் காற்றின் வேகம் காரணமாக தீயானது மெல்ல மெல்ல பரவத் தொடங்கியதால் தீயை அணைப்பதில் தீயணைப்புத் துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. பின்னர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிக வெப்பத்தினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது யாரேனும் தீ வைத்தனரா என்ற கோணத்தில் கள்ளக்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்