வேட்புமனுத் தாக்கல் நிறைவு; 50 ஆயிரம் பேர் மனு?


வேட்புமனுத் தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. சுமார் 50 ஆயிரம் பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 28-ம் தேதி முதல் இன்றுவரை(பிப்.4) வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இன்று கடைசி நாள் என்பதால், பல அரசியல் கட்சி வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் சுவாரசியம் என்னவென்றால், சுயேச்சை வேட்பாளர்கள் மேளதாளம் முழங்க வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தனர். மாலை 5 மணியுடன் வேட்புமனுத் தாக்கலுக்கான கால அவகாசம் நிறைவடைந்தது.

வேட்புமனுத் தாக்கல்

கூட்டம் அதிகமாக இருந்த இடத்தில் வேட்பாளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். தமிழகம் முழுதும் 50,000 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வேட்புமனுக்கள் அனைத்தும் நாளை காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, மனுத்தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற மனுக்கள் நிராகரிக்கப்படும்.

வரும் 7-ம் தேதி மாலை 5 மணிவரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். அன்றைய தினம் மாலையே சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படுகிறது. வரும் 19-ம் தேதி அனைத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும்.

தேர்தலில் பதிவான வாக்குகள், 22-ம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட இருக்கிறது.

x