மதுரையில் முதல்முறையாக உலக சாதனைக்கான யோகா சிறப்பு நிகழ்வு: 2 ஆயிரம் பேர் பங்கேற்பு


மதுரை: மதுரையில் முதல்முறையாக நடந்த உலக சாதனைக்கான யோகா நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, மகா மகரிஷி அறக்கட்டளை சார்பில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் முதல்முறையாக 2 ஆயிரம் நபர்கள் இணைந்து விபரீத கரணி யோகாசன சாதனை எனும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஜென்ஸ்கர் தற்காப்புக்கலை பிரிவு தலைமை மாஸ்டர் வினோத் வரவேற்றார். காஞ்சிபுரம் மகாயோகம் மாஸ்டர் ரமேஷ் ரிஷி உடல் ஆரோக்கியம் பற்றி பேசினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜிஆர் .சுவாமி நாதன் பேசும்போது, “யோகா கலை என்பது உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். இது உடலுக்கு எனர்ஜியை கொடுக்கும் கலை. எல்லோரும் வேலை இருக்கும். ஆனாலும், நேரம் ஒதுக்கி, குறைந்தது 10 நிமிடமாவது யோகா செய்தால் உடல் நலத்துக்கு நல்லது” என்றார்.

இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் சூரி, ஆயுதப்படை துணை ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கின்னஸ் யோகா சாதனையாளர் வழக்கறிஞர் ரஞ்சனா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

தமிழகம் முழுவதும் இருந்து சிறியவர் முதல் பெரியவர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள், ஜென்ஸ்கர் மற்றும் மகா யோசன பயிற்சியை மேற்கொண்டும், விபரீதகரணி ஆசனத்தில் தொடர்ந்து நின்றும் உலக சாதனை படைத்தனர்.