செல்போன் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு @ விழுப்புரம் 


விழுப்புரம்: செல்போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் கட்டிடத் தொழிலாளி உயிரிழந்தார்.

விழுப்புரத்தை அடுத்த திருவாமத்தூர் பகுதியை சேர்ந்த வீரப்பன் மகன் அய்யப்பன் (32) என்பவர் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று விழுப்புரத்தை அடுத்த எம்.குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்கிற கட்டிட மேற்பார்வையாளருடன், கண்டமானடி பகுதியில் உள்ள வீட்டிற்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது தனது செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக அய்யப்பன் தன்னுடைய மின் இணைப்புக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட மின் கசிவினால், மின் தாக்குதலுக்குள்ளான அய்யப்பன் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

x