தாம்பரம் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: மட்டன் பிரியாணி விருந்து நடத்தி அசத்தல்


தாம்பரம்: தாம்பரத்தில் நடைபெற்ற மாநகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தொண்டர்கள் கட்சியினருக்கு தி.மு.க.வினர் மட்டன் கறி விருந்து கொடுத்து அசத்தி இருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் மாநகர திமுக சார்பாக கிழக்கு தாம்பரம் அன்னை பாத்திமா சமூக நலக்கூடத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினரும் தாம்பரம் மாநகர செயலாளருமான எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ இ. கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு நடைபெற்று முடிந்த மக்களாவை தேர்தலில் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.

மேலும் எதிர்வரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் செய்யவேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள். பின்னர் இறுதியாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிருபர்களை வெளியேற்றி ரகசிய ஆலோசனை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.ஆர்.பாலு வெற்றிபெற்றார். இதனையடுத்து வெற்றிக்கு பாடுபட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு சுமார் 1500 மட்டன் பிரியானி, முட்டை தொக்கு, சிக்கன் வறுவல் தயிர் வெங்காயம், கத்திரி பச்சடி வழங்கப்பட்டது. இதில் கோஷ்டி அரசியலை மறந்து இரு தரப்பினரும் உற்சகத்துடன் பங்கேற்றனர். இந்தப் பிரமாண்டமான விருந்துக்கான ஏற்பாடுகளை தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர். ராஜா செய்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.