தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு?


பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவிகள்

தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். அதே நேரத்தில், தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று குறைந்து வந்தாலும், 30 ஆயிரம் என்ற அளவில் நாளொன்றுக்கு தொற்று எண்ணிக்கை இருந்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது, கடைபிடிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகள் வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளன. இந்த நிலையில், தொற்றின் நிலையை ஆய்வு செய்யவும், தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றியும் இன்று மருத்துவ நிபுணர்கள், குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.

முதற்கட்டமாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்ட நிலையில், தற்போது 1 முதல் 12 வரை பள்ளிகளை திறப்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்லூரிகளை பொறுத்தவரை பிப்ரவரி 1 முதல் 20-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருப்பதால், தேர்வுகள் முடிந்த பிறகு நேரடி வகுப்புகள் நடைபெறுவதற்கும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x