பக்ரீத்: வடலூர் ஆட்டுச் சந்தையில் ரூ.2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை


வடலூர் ஆட்டு சந்தையில் விற்பனைக்காக குவிந்த ஆடுகள்

கடலூர்: வடலூர் ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு வடலூர், அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நெய்வேலி, காடாம்புலியூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, மருவாய், கருங்குழி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, மடப்பட்டு, புவனகிரி, வளையமாதேவி, வடக்குத்து, மேட்டுக்குப்பம், கம்மாபுரம்,காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை, மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் வெள்ளாடு, கொடிஆடு, செம்மரி ஆடுகளை வடலூர் ஆட்டு சந்தையில் விற்பனை செய்வது வழக்கம்.

இந்நிலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 2 மணியில் இருந்து சந்தை தொடங்கி நடைபெற்றது. இதில் ஆடுகளை வாங்குவதற்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை,உள்ளிட்ட தமிழகத்திலிருந்து பல மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் குவிந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

ஒரு ஆடு விலை குறைந்த விலை ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்ச விலை ரூ.45, ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று (ஜூன்.15) மட்டும் 2.5கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்ற ஆண்டு விட இந்த ஆண்டு ஆடுகள் அதிகமாக விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.