"தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஆம்னி பஸ்கள் இயங்காது" என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் நலன் கருதி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் மொபைல் செயலிகள் மூலமாக ஆட்டோ, டாக்சிகளை முன்பதிவு செய்து செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசுப் பஸ்கள் இயங்காத நிலையில், நாளை ஒருநாள் மட்டும் ஆம்னி பஸ்களும் இயங்காது என்றும் நாளை மறுநாள் (ஜன.24) முதல் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.