“திமுகவில் இருப்பவர்கள் வழிவழியாக வந்தவர்கள்” - அமைச்சர் பொன்முடி பெருமிதம்


விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விழுப்புரம் எம் எல் ஏ லட்சுமணன், விக்கிரவாண்டி திமுக வேட்பாளரான மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, மாவட்ட அவைத் தலைவர் ஜெயசந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் செந்தமிழ் செல்வன், புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், தயா இளந்திரையன், கற்பகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில துணைப்பொதுச் செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி பேசியது” ''நான் ஒன்றை குறிப்பாக சொல்லியாக வேண்டும். நான் பேராசிரியராக பணியாற்றியபோது ஜனகராஜ், புஷ்பராஜ் ஆகியோர் படித்துக்கொண்டிருக்கும்போதே பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள். வீட்டில் ராஜேஷ் என அழைக்கபடும் கௌதம சிகாமணி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே திமுகவிற்காக பணியாற்றியவர். மாணவர் பருவத்திலேயே அவர் திமுகவின் கொள்கையை பின்பற்றியவர்.

அன்னியூர் சிவா, ஜெயசந்திரன் சொன்னது போல 25 ஆண்டுகளுக்கு முன்பே தளபதி நற்பணி மன்றம் துவக்கி அப்போதே உதயநிதியை அழைத்து வந்தது இந்த விழுப்புரம் நகரம்தான். திமுகவை வளர்க்க அப்போதே உழைத்தவர். அந்த உழைப்பிற்குதான் திமுக தலைமை இன்று மாவட்டத்தின் பொறுப்பாளராக கௌதம அடையாளம் காட்டியுள்ளது.

தற்போது முதல் சவால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலாகும். இத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். விசிக வேட்பாளருக்கு அதிக வாக்குகளை கொடுத்த தொகுதி விக்கிரவாண்டியாகும். எனவே நாம் ஒன்றிணைந்து பணியாற்றிடவேண்டும். நாம் நம் வெற்றியை உறுதியாக்க பாடுபடவேண்டும். அன்னியூர் சிவா 1989ம் ஆண்டு முதல் திமுகவிற்கு உழைத்தவர். அவரின் அப்பா தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும்போதே திமுகவிற்கு உழைத்தவர்.

திமுக என்றால் குடும்பம் குடும்பமாக அரசியலில் செயல்பட்டு வருபவர்கள்தான். அது கலைஞர் குடும்பமாக இருந்தாலும், என் குடும்பமாக இருந்தாலும், நீங்களாக இருந்தாலும் எல்லோருக்கும் பொறுந்தும். நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர் ரவிதுரையின் அப்பா சிந்தாமணி ஜெயராமன். அந்த ரவிதுரை ஒன்றிய செயலாளர். அவரின் மகள் ஒன்றியக்குழுதலைவர். இப்படி இங்கு உள்ளவர்கள்தான் வழிவழியாக வந்தவர்கள். நம்முடன் வந்து இணைந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஜெயசந்திரன் செஞ்சியாருடன் சென்று திரும்பிவந்தவர்தான்.

லட்சுமணன் எம் எல் ஏ திமுகவில் இணைந்த பின் மும்முரமாக பணியாற்றிவருகிறார். முன்னாள் எம் எல் ஏ செந்தமிழ் செல்வன் பாமகவிலிருந்து வெளியே வந்து திமுகவில் இணைந்தவர்தான். கொள்கைரீதியாக திமுக செயல்படுவதால்தான் மாற்றுக்கட்சியிலிருந்து வந்து இணைந்துள்ளனர். கொள்கையோடு கட்சி, ஆட்சியை நடத்தும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான். அன்னியூர் சிவாவை லட்ச கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கவேண்டும். இந்த வெற்றி அன்னியூர் சிவாவுக்கு கிடைக்கும் வெற்றி மட்டுமல்ல. மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணிக்கு கிடைக்கும் வெற்றியாகும்.'' இவ்வாறு அவர் பேசினார்.

வீதி வீதியாக ஓட்டுகேட்ட சிறுவனுக்கு எம்எல்ஏ சீட்டு கொடுத்த முதல்வர்: இக்கூட்டத்தில் வேட்பாளர் அன்னியூர் சிவா பேசியது, ''கடந்த 1984ம் ஆண்டு முகையூர் சட்டமன்ற தேர்தலின்போது போடுங்கம்மா ஓட்டு, உதயசூரியனைப் பார்த்து என்று வீதி, வீதியாக சென்று ஓட்டுகேட்ட அந்த சிறுவன்தான், இன்றைக்கு வேட்பாளராக உங்கள் முன் நிற்கிறேன். வீதி வீதியாக ஓட்டுகேட்ட என்னையும் எம்எல்ஏ வேட்பாளராக அறிவித்த முதலமைச்சருக்கும், பரிந்துரைத்த அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்'' என்றார்.