திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை விலக்க வேண்டும்!


பேரணியில் பி.ஆர்.பாண்டியன் பேச்சு

``தமிழர்களின் உரிமையை பறிக்க பாஜக, காங்கிரஸ் கட்சியும் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். இதனை திமுக புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்'' என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ஆர். பாண்டியன் கூறினார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் இன்று (ஜன.,19) மேகேதாதுவில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக திருவாரூரில் தொடங்கி பேரணியாக ஓசூர் வரை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் சென்றனர். நேற்றிரவு விவசாயிகள் சங்கத்தினர் நாமக்கல் வந்தனர். அவர்களுக்கு நாமக்கல் விவசாயிகள் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.

அப்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் பேசுகையில், "காவிரியின் குறுக்கே மேகேதாதுவில் அணைக் கட்டினால் தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் இந்த பேரணியை தொடங்கியுள்ளோம். பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் இந்திய அளவில் எதிர் துருவங்களாக இருந்தாலும் தமிழர்களின் உரிமையை பறிப்பதில் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜக, காங்கிரஸ் கட்சி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2014ல் பாஜக ஆட்சியமைத்தது முதல் விவசாயிகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது" என்றார்.

பி.ஆர்.பாண்டியன் தலைமையில் பேரணி

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ், பாஜகவும் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். இதனை திமுக புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் பாஜகவைப் போல் தனிமைப்படுத்த வேண்டும். மணல் கொள்ளையை விவசாயிகள் எதிர்க்கிறோம். அதேவேளையில் மணலுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து அரசே விற்பனை செய்ய வேண்டும்.

எனினும் மணல் கொள்ளைக்கு திமுக அரசு துணை போகிறதோ என்ற அச்சம் உள்ளது. இதை அரசு போக்க வேண்டும். மேகேதாதுவில் அணைக்கட்டுவதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரியின் பேச்சு துணை போவதாக உள்ளது. இனி மாநிலக் கட்சிகள் தான் இந்தியாவை ஆளப்போகிறது" என்றார். இந்த பேட்டியின்போது விவசாய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

x