பக்ரீத்: செஞ்சி வாரச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!


செஞ்சி வார சந்தையில் விற்பனைக்கு குவிந்த ஆடுகள்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வாரச் சந்தையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, ரூ 7 கோடிக்கு ஆட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும் 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழமையான இந்த, வாரச் சந்தையில் ஆடு, மாடுகள், அதிகளவில் விற்பனை செய்யப்படும்.

குறிப்பாக, செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப் பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்க்கப்படுவதால் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

இவர்கள் போட்டி போட்டுகொண்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள் என்பதால் செஞ்சி வாரச் சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக உள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக ஏராளமான இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக இன்று காலையில் செஞ்சி வாரச் சந்தைக்கு வந்திருந்தனர்.

இன்று அதிகாலை 3 மணி முதலே விவசாயிகள் தங்களது வளர்ப்பாடுகளையும், வெளி மாவட்டத்திலிருந்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகளும் ஆடுகளை விற்ப்பதற்காக கொண்டு வந்தனர். ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக வாகனங்களில் செஞ்சி வாரச்சந்தையில் குவிந்திருந்தனர்.

சந்தைக்கு விற்பனைக்காக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இத்னால் காலையிலேயே சுமார் ரூ.7 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் கூறினர்.