இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உதவித்தொகை: மூத்த வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம்ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம்வரை உதவித்தொகை வழங்கவேண்டும் என மூத்த வழக்கறிஞர் களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞரான ஃபரிதா பேகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இளம் வழக்கறிஞர்கள் பயன்பெறும் வகையில் வழக்கறிஞர்கள் நல நிதிச்சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்த புதுச்சேரி அரசுக்கும், பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தொழிலை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் இளம் வழக்கறிஞர்கள் ஊதியமின்றி பணியாற்றுவர் எனமூத்த வழக்கறிஞர்கள் எதிர்பார்க்கக்கூடாது. அதேபோல வழக்கறிஞர்கள் நல நிதியத் திட்டத்தின் கீழ் இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி அரசு மற்றும் புதுச்சேரி – காரைக்கால் வழக்கறிஞர்கள் சங்கங்களுடன் இணைந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரத்தையும், மற்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.15 ஆயிரத்தையும் உதவித்தொகையாக மூத்த வழக்கறிஞர்கள் வழங்க வேண்டும்.

இதுதொடர்பாக அனைத்து வழக்கறிஞர்களுக்கும் 4 வாரங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிபார் கவுன்சில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கான உதவி தொகையை வழங்குவதில் எந்தவொரு பாரபட்சமும் காட்டக்கூடாது என அறி வுறுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.