ஜூன் 21-ல் உலக யோகா தினத்தை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாட பாஜக ஏற்பாடு: ஒருங்கிணைப்பு குழு நியமனம்


கோப்புப்படம்

சென்னை: ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினத்தை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி, மாவட்ட, மண்டல அளவில் யோகா நிகழ்ச்சிகளை வழிநடத்த மாநில ஒருங்கிணைப்பு குழுவை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.

மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் மாநிலசெயலாளர் ஆர்.ஆனந்த பிரியா, செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத், இளைஞர் அணி தலைவர் எம்.ரமேஷ் சிவா, மகளிர் அணி பொதுச் செயலாளர் மோகன பிரியாசரவணன், கல்வியாளர் பிரிவு அமைப்பாளர் தங்க கணேசன், ஓபிசி அணி பொதுச் செயலாளர் வீர திருநாவுக்கரசு, சமூக ஊடக பிரிவு துணை தலைவர் கார்த்திக் கோபிநாத், எஸ்சி அணி துணை தலைவர் பி.சம்பத்ராஜ் ஆகிய 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.

கட்சி நிர்வாகிகளுக்கு அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

‘‘ஜூன் 21-ம் தேதி உலக யோகாதினத்தில் அனைத்து மண்டலங்களிலும் குறைந்தது ஓர் இடத்திலாவதுமிக சிறப்பான முறையில் யோகாதின விழா நடத்த வேண்டும்.

யோகா, கலை, ஆரோக்கியம், மன அமைதி, சேவை, நாட்டு நலன்,சுத்தம், சுகாதாரம் பற்றிய உரையுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்வதோடு, தினமும் யோகா செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி பேச வேண்டும்.இதற்கான பணிகளுக்கு மாநில அளவில் ஒருங்கிணைப்பு குழு அமைத்துள்ளதுபோல,மாவட்ட அளவில் குழு அமைத்து செயல்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.