நாயைச் சுடுகிறோமென்று என் தாயை சுட்டுக் கொன்றுவிட்டார்கள்


உயர் நீதிமன்றம்

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் புதுக்கோட்டையில் குண்டுபாய்ந்து சிறுவன் இறந்த சம்பவத்தைச் சந்தித்த தமிழக அரசு, அடுத்து சந்திக்கும் குண்டு பாய்ந்ததால் உயிரிழந்த விவகாரம் இது. ஆனால், இது சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இந்த வழக்கில் பஞ்சாயத்து பொறுப்பாளர்களும், அரசும் தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் எறையூரைச் சேர்ந்த பாபு, கடந்த 2016-ல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “எறையூர் பஞ்சாயத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களை சுட்டுத்தள்ள, பஞ்சாயத்து தலைவர் குளஞ்சி, துணைத் தலைவர் சின்னதுரை, கவுன்சிலர் ஜெயராமன் ஆகியோர் சேர்ந்து விஜயகுமார் என்ற நரிக்குறவரை நியமித்தனர். அவர் நாய்களை குறிவைக்காமல் கண்மூடித்தனமாக சுட்டுக்கொண்டிருந்த போது, வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த எனது தாய் விஜயாவின் காலில் குண்டு பாய்ந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய 3 நாட்களில் எனது தாய் இறந்துவிட்டார்.

மருத்துவமனையில் குண்டு பாய்ந்ததை மருத்துவரிடம் தெரிவிக்காமல், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட மூவரும் வெறும் காயத்துக்கு சிகிச்சை கொடுக்கச் சொல்லியுள்ளனர். பிரேதப் பரிசோதனையின்போது, காலில் இருந்த நாட்டு துப்பாக்கி குண்டு எடுக்கப்பட்டது. அந்த குண்டு சிறிதளவு நச்சுத்தன்மையும் கொண்டது. இதுதான் எனது தாயின் மரணத்துக்குக் காரணம். இதுகுறித்து, 3 பேருக்கும் எதிராக மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பின்னர், வழக்குப் பதிவு செய்த நிலையில் இழப்பீடு வழங்குவதாகக் கூறியவர்கள் பின்னர் ஏமாற்றி விட்டனர். எனவே, நாய் பிடிக்கும்போது அஜாக்கிரதையாக செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘விஜயா உயிரிழந்ததற்கு நாய்களை சுட்டுப்பிடித்ததே காரணம் என்பதற்கான முகாந்திரம் உள்ளது. தெருவில் திரியும் நாய்களை சுட்டுத்தள்ள உத்தரவிட்டதே சட்டப்படி தவறு. எனவே, விஜயா மரணத்துக்கு காரணமான மூவரும் சேர்ந்து விஜயாவின் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.

இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்படவில்லை என்பதால், தமிழக அரசும் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மொத்த இழப்பீடான 10 லட்ச ரூபாயை விஜயாவின் வாரிசுகளுக்கு 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளார்.

x