கரோனா பரிசோதனை யார்யாரெல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக, வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், ‘கரோனா உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்கள், எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றால் பரிசோதனை தேவையில்லை’ என தமிழக பொது சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
அந்தத் தகவலின்படி, ‘காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், உடல்வலி இருப்போருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டோரின் தொடர்பில் இருந்தோரைப் பொறுத்தவரை அறிகுறிகள் உள்ளோர், 60 வயதுக்கு மேற்பட்டோரில் இணைநோய் உடையோர் அல்லது அறிகுறி உடையோர், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு குறைப்பு மருந்துகளை எடுத்துக்கொள்வோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மற்றபடி, கரோனா உறுதியானவருடன் தொடர்பில் இருந்தவர்கள் எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றால், பரிசோதனை தேவையில்லை. தொற்று உறுதியாகி சிகிச்சை மையங்கள் அல்லது வீட்டு தனிமையில் உள்ளோர், தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தாலே 7-வது நாள் முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். அவர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை.
தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர், முழுமையாகக் குணமடைந்த பிறகுதான் டிஸ்சார்ஜ் செய்யப்பட வேண்டும் என மாநில பொது சுகாதாரத் துறையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.