வாடகை செலுத்தாத மதுரை மாநகராட்சி கடைகள்: நிலுவையை செலுத்தாவிட்டால் ஏலம் விட முடிவு


மதுரை: நீண்ட நாட்களாக வாடகையை செலுத்தாமல் ஏமாற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை கணக்கெடுத்து அவற்றை மறு ஏலம் விடுவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு வரி இனங்களுடன் கடைகள் வாடகை, குத்தகை வருவாய் ஏலம் உள்ளிட்டவை மூலமாகவும் வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயைக் கொண்டே, மாநகராட்சி ஊழியர்கள் ஊதியம், பொதுமக்களுக்கான அன்றாட அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசு மானிய நிதி குறைந்ததால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வரிவசூல் முக்கியமாக உள்ளது.

மதுரை மாநகராட்சியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வரிவசூல் அதிகரித்துள்ள நிலையில் மீதமுள்ள வரிபாக்கியையும் வசூல் செய்வதற்கு மாநகராட்சி கடுமை காட்ட முடிவு செய்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்காக, வரிவசூலில் கடுமையான நடவடிக்கை காட்டாமல் மென்மையான போக்கை காட்டியது மாநகராட்சி. தற்போது தேர்தல் முடிந்த நிலையில் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் வருவாய்துறை அதிகாரிகளை கொண்ட குழுக்கள் அமைத்து, கடைகள் வாடகை, சொத்து வரி செலுத்தாத நிறுவனங்கள், வியாபாரிகளை கணக்கெடுத்து அவர்களிடம் நிலுவைத்தொகையை வசூல் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''வரி பாக்கி வாடகை பாக்கி உள்ளிட்டவற்றை வசூல் செய்வதற்காக வார்டு வாரியாக மாநகராட்சி கடைகள், அதன் அளவு, உரிமையாளர் பெயர் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சி கடைகளை பெரும்பாலும், அரசியல்வாதிகளும், அவர்கள் ஆதரவு பெற்ற வியாபாரிகளுமே வாடகைக்கு எடுத்துள்ளனர்.

பேருந்து நிலையங்கள், காய்கறி மார்க்கெட் உள்பட அனைத்து இடங்களிலும் உள்ள மாநகராட்சி கடைகளை பெரும்பாலும் உள்வாடகைக்குத்தான் விட்டுள்ளனர். ஆனால், அது தற்போது பிரச்சினையில்லை. வாடகை செலுத்தாமல் இருப்பது மாநகராட்சி வருவாயை பாதிக்கிறது. மாநகராட்சியில் மொத்தம் 3,800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் தற்போது வார்டு வாரியாக எடுத்த கணக்குப்படி 1,800 கடைகள் வரை, முறையான வாடகை செலுத்தாமல் நீண்ட நாள் பாக்கி வைத்துள்ளனர்.

இப்படி பாக்கி வைத்திருப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த கடைகளுக்கு நிலுவை வாடகையை செலுத்தக் கூறி, நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அதையும் மீறி அவர்கள் செலுத்தாவிட்டால், விரைவில் வரக்கூடிய ஏலம் அறிவிப்பில் அந்த கடைகளை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.