காட்டெருமைகளால் மனித உயிரிழப்பு: தடுக்க வனத் துறை முயற்சி


நீலகிரி மாவட்டத்தில் காட்டெருமைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க வனத் துறை, சர்வதேச வன விலங்குகள் நிதியத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டியே உள்ளன. அதுவும் பெரும்பாலான தேயிலைத் தோட்டங்கள் வனங்களை ஒட்டியே காணப்படுகின்றன. இதனால், காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள் மற்றும் காட்டுப் பன்றி போன்ற விலங்குகள் தேயிலைத் தோட்டங்களுக்குள் வந்துவிடுகின்றன.

இவை அங்குள்ள பயிர்களை நாசம் செய்வதோடு, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை தோட்டங்களுக்குச் செல்லவிடாமல் அச்சுறுத்துகின்றன. இவை தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே வளர்ந்துள்ள களைச் செடிகளையும், புற்களையும் உட்கொள்ள ஆரம்பித்தால், சுமார் 2 முதல் 5 மணி நேரம் வரை அங்கேயே சுற்றி சுற்றி வருகின்றன.

இதனால், அந்தத் தேயிலைத் தோட்டங்களுக்கு விவசாயிகளோ அல்லது கூலித் தொழிலாளிகளோ பணிக்குச் செல்ல முடிவதில்லை. சில சமயங்களில் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை விரட்டுவதால், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விவசாய நிலங்களுக்குள் நுழையும் காட்டெருமைகளை விவசாயிகள் விரட்டும்போது, கன்றுகள் தங்கள் தாயுடன் தோட்டங்களிலிருந்து ஓடுகின்றன. தோட்டத்தில் வேலி அமைக்கப்பட்டிருப்பதால், அதைத் தாண்டிச் செல்ல வேண்டிய சூழலில், கன்றுகள் சிலநேரம் வேலியில் சிக்கிக் காயமடைகின்றன.

சில நேரங்களில் காட்டெருமைகள் தாக்கி மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் மாவட்டத்தில் காட்டெருமைகள் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்தக் காட்டெருமைகள் தேயிலைத் தோட்டங்களுக்குள் வராமல் தடுக்க, வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சர்வதேச வன விலங்குகள் நிதியத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.பூமிநாதன் கூறும்போது, ‘‘வனத் துறையுடன் இணைந்து எங்கள் அமைப்பு, மக்கள் மற்றும் காட்டெருமை மோதல் குறித்து முழு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். காட்டெருமைகளின் எண்ணிக்கை, அவை அதிகம் வசிக்கும் இடங்கள், மோதல் ஏற்படும் இடங்கள், மனித-விலங்குகள் மோதலைத் தவிர்ப்பது குறித்தும் அறிய மோதல் நிகழ்ந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவி, காட்டெருமைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கிறோம்’’ என்றார்.

தோட்டத்தில் காட்டெருமைகள்

காட்டெருமைகளின் தாக்குதலைத் தடுக்கும் நடவடிக்கை பற்றி வனத் துறையினர் கூறியதாவது: “நீலகிரி மாவட்டத்தில் காட்டெருமைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால், கூட்டத்தில் வெளியேறும் விலங்குகள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து விடுகின்றன. இதனால் ஏற்படும் மனித-விலங்கு மோதல்களைத் தவிர்க்க, சர்தேச வனவிலங்குகள் நிதியத்துடன் இணைந்து வனத் துறை அறிவியல்ரீதியாக ஆய்வுசெய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, காட்டெருமைகளின் வழித்தடத்தில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றவும், பிரச்சினைக்குரிய விலங்குகளை இடம்மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

விலங்குகள் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, வனங்களில் உள்ள களைச்செடிகள் மற்றும் அந்நிய தாவரங்களான கற்பூரம், சீகை மரங்களை அகற்றி, புல்வெளிகளை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறோம்” என்றனர்.

x