திமுகவில் டி.ஆர்.பாலுவுக்கும் பி.டி.ஆருக்குமே முரண்பாடு!


மதுரை கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்த அண்ணாமலை. அருகில் நடிகை காயத்ரி ரகுராம்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாளையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மனின் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும், விவேகமும் இளைய சமுதாயத்துக்கு உந்து சக்தியாக திகழ்கிறது. பாஜக சார்பில் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கும், சிவகங்கையில் வீரமங்கை வேலுநாச்சியாருக்கும் விழா எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு சிவப்புடன் நீலமும் சேர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியிருக்கிறார். அவர் சொன்ன கலர் காம்பினேசன் புரியவில்லை. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை யாரையும் நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை. எல்லா கலர்களும் எங்களுக்கு வேண்டும். எத்தனை கட்சி சேர்ந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது.

காங்கிரஸ் கட்சி தற்போது காற்று இல்லா பலூனாகிவிட்டது. அதனால் தான் நாடு கடத்தப்படுவதுபோல, அதன் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அடிக்கடி நாட்டைவிட்டு காணாமல் போய்விடுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு இந்திய அளவில் முடிவுரை எழுதப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அக்கட்சியின் சரித்திரம் விரைவில் முடிவுக்குவரும். அவர்கள் திமுகவின் ‘பி’ டீமாக எத்தனை நாள் இருப்பார்கள் என்று பார்ப்போம்.

உத்தர பிரதேசத்தில் கடந்த 2019 சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக இணைந்தனர். ஆனால் பாஜக மகத்தான வெற்றியைப் பெற்றது. அதனால்தான் தற்போது காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்கட்சிகள் தனித்துபோட்டியிட முடிவு செய்துள்ளன.

இந்திய மக்கள் அனைவரும் பாஜக பக்கம் இருக்கிறார்கள். எனவே, எத்தனை எதிர்க்கட்சிகள் இருந்தாலும் பாரதிய ஜனதாவை வீழ்த்த முடியாது. தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருவதால் மாநில அரசின் கட்டுப்பாடுகளை ஒரு சதவீதம்கூட மீறாமல் கடைபிடித்து கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வரும்போது கட்சி சார்பில் மோடி பொங்கல் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழர் கலாசாரம் மீறப்படவில்லை.

மோடி எங்களோடு சேர்ந்து தமிழக கலாசாரத்தோடு இணைந்து பொங்கல் வைப்பதால் ‘மோடி பொங்கல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தமிழர்களாகிய நமக்கு கிடைத்த பெருமை.

திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் 4 ரூபாயும் குறைப்பதாக கூறினார்கள். ஆனால், திமுக கட்சிக்குள் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வருவதில் முரண்பாடுகள், குழப்பங்கள் நிலவி வருகின்றன. டி.ஆர்.பாலு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்கிறார். நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனோ அது கூடாது என்கிறார். இப்படி முரண்பாடுகளுடன் நடந்து வரும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், துணை தலைவர் ஹரிஹரன், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x