குமரிக் கடலில் சூறைக்காற்று; படகுப் போக்குவரத்து ரத்து


திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி கடலில் சூறைக்காற்றும், ராட்சத அலைகளும் எழுந்து வருவதால் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

விவேகானந்தர் பாறை

சர்வதேச சுற்றுலாத்தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இங்கு கடல் நடுவே கம்பீரமாகக் காட்சியளிக்கும் விவேகானந்தர் நினைவு இல்லம், திருவள்ளுவர் சிலையைப் பார்த்து ரசிக்க மக்கள் திரளாக வருவது வழக்கம். இதற்கென தமிழக அரசின், பூம்புகார் சார்பில் படகுப் போக்குவரத்தும் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அதிக அளவில் மக்கள் திரள்வார்கள் என்பதால், கடந்த டிச.31-ம் ஆம் தேதி முதல், நேற்றுவரை சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை செய்யப்பட்டு இருந்தது.

கன்னியாகுமரியைப் பொறுத்தவரை பொதுவாகவே டிசம்பர், ஜனவரி மாதங்களில் சபரிலைக்கு ஆன்மிக யாத்திரை வருபவர்களால் அதிக அளவு கூட்டம் இருக்கும். அதோடு இப்போது பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை அறிவித்திருப்பதால், கூட்டம் களைகட்டும் காலம் இது. ஆனால், கன்னியாகுமரியில் கரோனா பரவலைத் தடுக்கும் முன்னேற்பாடாக 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இன்றில் இருந்துதான் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் காலையில் இருந்தே அதிக அளவில் திரண்டிருந்தது.

அதேநேரம், குமரிக்கடலில் தொடர்ந்து வீசிய சூறைக்காற்று, ராட்சத அலைகளின் காரணமாக படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து பூம்புகார் படகுதள அதிகாரிகள் கூறும்போது, ‘‘இப்போதைய தருணத்தில் படகை இயக்க முடியாத சூழல் உள்ளது. கடலில் சூறைக்காற்றும், அலைகளும் குறைந்து இயல்புநிலை திரும்பியதும் மீண்டும் படகுப் போக்குவரத்தைத் தொடங்குவோம்’’ என்றனர்.

x