ஆந்திர முதல்வர் சந்திரபாபுவுக்கு ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து


சென்னை: ஆந்திர முதல்வராக நேற்று பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: ஆந்திர மாநில முதல்வராக 4-வது முறையாக பொறுப்பேற்றுள்ள என்.சந்திரபாபு நாயுடுவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். உங்கள் தலைமை ஆந்திராவுக்கு வளத்தையும், நலத்தையும் கொண்டு வரட்டும். இரு மாநில முன்னேற்றத்துக்காக, ஆந்திரா - தமிழகம்இடையிலான நட்பையும், கூட்டுறவையும் வலுப்படுத்துவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்.

பாமக தலைவர் அன்புமணி: ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவுக்கும், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பவன் கல்யாண் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள். அண்டை மாநிலங்கள் என்ற வகையில் வளர்ச்சி, நல்லுறவுக்காக ஆந்திராவும், தமிழகமும் இணைந்து செயல்படுவது அவசியம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகள். பவன் கல்யாண், நாரா லோகேஷ் உள்ளிட்ட 24 பேர்அமைச்சர்களாக பொறுப்பேற்றதும் வாழ்த்துக்குரியது. ஆந்திரா – தமிழகம் இடையிலான நல்லுறவு மேம்படும் வகையில் இந்த புதிய ஆட்சி நடைபெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

x