15 முதல் 18 வயது வரையான சிறாருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை அரசு மகளிர் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.
நாடு முழுதும் 10 கோடி சிறாருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கி உள்ளது. இதற்காக நாடு முழுதும் கோவின் செயலி மூலம் இதுவரை சுமார் 8 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சிறாருக்கான தடுப்பூசி போடும் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை சைதாப்பேட்டை அரசு மகளிர் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.
முகாமை தொடங்கி வைத்தபோது முதல்வர் பேசியதாவது: “சென்னையில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி. ஒமைக்ரான் வைரஸ் தற்போது மிரட்டத் தொடங்கி இருக்கிறது. ஒமைக்ரான் வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். முந்தைய வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தாக்கம் சற்றுக் குறைவு.
இருப்பினும் நோய்ப் பரவலைத் தடுக்கும் பாதுகாப்பு கேடயமாக முகக்கவசம் விளங்குகிறது. எனவே, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மக்கள் பொது இடத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சத்தியைக் கொடுக்கும் தடுப்பூசியைச் செலுத்தி உள்ளோம். எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை, உங்கள் குடும்பத்தில் ஒருவனாகக் கேட்டுக் கொள்கிறேன். தொற்றில் இருந்து விடுபட்டுள்ள மாநிலத்திலும் தமிழகம் முதலிடம் பெறவேண்டும்” என தெரிவித்தார்.