தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நாளையுடன் நிறைவடைகிறது: சந்தையில் மீன் விலை குறையும் என எதிர்பார்ப்பு


சென்னை: இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. நாளை நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இதனால், அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை குறையத் தொடங்கும் என தெரிகிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் கடந்த ஏப்.15-ம் தேதி தொடங்கியது. நாளையுடன் (14-ம் தேதி) நிறைவடைகிறது.

இந்தத் தடை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டன.

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த காலகட்டத்தை பயன்படுத்தி படகுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மீன்பிடி தடைக் காலத்தின்போது மீன்பிடித் தொழில் முற்றிலுமாக தடைபட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் மீன்பிடித் தடைக் கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

இந்த தடைக் காலம் நாளையுடன் நிறைவடைவதால், நாளை நள்ளிரவே மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகுகளில் ஐஸ் கட்டிகள், டீசல், உணவுப் பொருட்கள், குடிநீர், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சில மீனவர்கள் தங்களது படகுகளுக்கு வர்ணம் தீட்டுதல் மற்றும் கடைசி நேர மராமத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடித் தடை காரணமாக கடந்த 2 மாதங்களாக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனால், ரூ.250-க்கு விற்கப்பட்டு வந்த கோழி கறியின் விலை அதிகபட்சமாக ரூ.320 வரை விலை உயர்ந்தது.

இந்நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்வதால் மீன்களின் வரத்து அதிகரிக்கும். இதனால், அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இந்த மீன்பிடி தடைக் காலத்தை வரும் அக்டோபர் மாதத்துக்கு மாற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, ‘`கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அங்கு பருவ மழை தொடங்கும் சமயத்தில் தான் மீன்பிடித் தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இதற்கு மாறாக மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. எனவே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடித் தடைக் காலத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’' என்றனர்.

x