மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதி; முதல்வரின் புத்தாண்டுச் செய்தி


முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதி பூண்டுள்ளதாக, தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு தனது 2022 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார். அதுகுறித்த செய்திக் குறிப்பில், ‘இனிமை சூழ்ந்து, இன்னல் அகன்று அனைத்து மக்களும் நலமும் வளமும்பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு. கடந்த 2 ஆண்டுகளாக உலகம் கண்டு வரும் பேரிடர்ச் சூழல், மனிதகுலத்துக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் அரசு, எதிர்வரும் புத்தாண்டில் இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதிபூண்டுள்ளது. நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைக்குரிய நமது தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் செழித்திடவும், உலகில் வாழும் மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிடவும் விழைகிறேன். நமது அரசுக்கு உறுதுணையாக விளங்கிடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x