தேனியில் கனமழை: அருவிகளுக்குச் செல்ல பொது மக்களுக்குத் தடை


கும்பக்கரை அருவி | ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா

தேனி: தேனி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அருவிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல வேண்டாம் என ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்துக்கு மே 19-ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், 20-ம் தேதி அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய், குளங்கள், ஊரணிகளில் நீர் நிரம்ப வாய்ப்புள்ளது.

மேலும், முல்லை பெரியாறு, கொட்டக்குடி, வைகை ஆறு, மூலவைகை, வராகநதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையும் உள்ளது. ஆகவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நீர்நிலைப் பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா கூறுகையில், “தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன்பு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய 43 பகுதிகள் கண்டறியப்பட்டு அவை குழு மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க 66 தங்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

வெள்ளம், இயற்கை பேரிடர் தொடர்பான புகார்களை (04546-250101) என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். நீர் வீழ்ச்சிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அங்கு செல்ல வேண்டாம்” என்றார்.