தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்கத் தேவையில்லை


அந்த நிகழ்வு...

சென்னை மியூசிக் அகாடமியில் கடந்த 24.01.2018 அன்று நடைபெற்ற தமிழ் - சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில், காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திரர் பங்கேற்றார். நிகழ்ச்சி தொடக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எச்.ராஜா, சாலமன் பாப்பையா உள்ளிட்டோரெல்லாம் எழுந்து நிற்க, விஜயேந்திரர் மட்டும் தன்னுடைய ஆசனத்தில் அப்படியே அமர்ந்திருந்தார். அதனால் தமிழ்த்தாய் வாழ்த்தை வேண்டுமென்றே அவர் அவமதித்ததாக சர்ச்சை எழுந்தது. அப்போது நான் தியானத்தில் இருந்ததால், எழவில்லை என்று பின்னர் அவர் விளக்கமளித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கண்.இளங்கோ தலைமையில் நாம் தமிழர் கட்சியினர், ராமேஸ்வரம் காஞ்சி மடத்துக்குள் நுழைந்து கோஷம் எழுப்பினார்கள். இதுகுறித்து ராமேஸ்வரம் கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கண். இளங்கோ உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று பிறப்பித்த உத்தரவு:

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது இறைவணக்கப் பாடல்தான், தேசிய கீதம் அல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவு இல்லை. அதேநேரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மிக உயர்ந்த மரியாதை வழங்கப்பட வேண்டும். உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது கூட்டத்தினர் எழுந்து நிற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில், இவ்வாறு எழுந்து நின்றுதான் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. பல்வேறு கலாச்சாரங்களை மதிக்கிற, கொண்டாடுகிற நாம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இப்படித்தான் மரியாதை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல.

ஆன்மிகவாதிகள் பிரார்த்தனையின் போது தியான நிலையில் இருப்பார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து இறைவணக்க பாடல் என்பதால், அந்தப்பாடல் இசைக்கப்படும்போது ஆன்மிகவாதிகள் தியான நிலையில் இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தியான நிலையில் கண்களை மூடிய நிலையில் இருந்துள்ளார். தாய்மொழி தமிழுக்கு அவர் அவரது வழியில் உரிய மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரர் மற்றும் புகார்தாரர் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனால் வழக்கை தொடர்ந்து நடத்துவதில் பலனில்லை. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவு வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

x