பயணி தவறவிட்ட லேப்டாப், ரூ.1.20 லட்சத்தை ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டு @ சேலம்


வாழப்பாடி அருகே அரசுப் பேருந்தில் தவறவிட்ட பையை பயணியிடம் ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநரை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பாராட்டினார்.

சேலம்: வாழப்பாடி அருகே அரசுப் பேருந்தில் லேப்டாப், 2 செல்போன், ரொக்கம் ரூ.1.20 லட்சம் ஆகியவற்றுடன் தவற விட்ட பையை, பயணியிடம் ஒப்படைத்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையத்தை சேர்ந்த பயணி ஒருவர், சேலம் கோட்ட அரசுப் பேருந்தில் பயணித்தபோது, அவரது பையை தவற விட்டுச் சென்றார். அந்தப் பையில் லேப்டாப், 2 செல்போன்கள், ரொக்கம் ரூ.1.20 லட்சம் ஆகியவை இருந்தன. இதனை கண்டெடுத்த பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர், அவற்றை உரிய பயணியிடம் ஒப்படைத்தனர். தவறவிட்டுச் சென்ற லேப்டாப், ரொக்கம் உள்ளிட்டவற்றை திரும்ப கிடைத்ததில் அந்தப் பயணி பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்.

இந்நிலையில், வாழப்பாடி கிளையைச் சேர்ந்த அந்த பேருந்தின் ஓட்டுநர் ராமானுஜம், நடத்துநர் சுதாகரை, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பொன்முடி, போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து, பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.