காவலர்கள் கால நேரமின்றி இரவு பகல் பாராமல் ஓய்வின்றி பணியாற்றுவதால், அவர்களுக்கு மன அழுத்தம் அதிக அளவில் ஏற்படும் சூழல் தொடர்ந்து வருகின்றது.
இதை கவனத்தில் கொண்டு, தமிழக காவல் துறை சார்பில் காவல் ஆளிநர்கள் (காவலர்கள்) முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் யோகா, உளவியல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், காவல் துறையில் பணியாற்றும் காவல் ஆளிநர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் வாராந்திர ஓய்வு அளிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு, கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் வாராந்திர ஓய்வுபெறும் காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, காவல் துறை சார்பில் ஒரு குறிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வாராந்திர ஓய்வுபெறும் காவலர்கள் ஓய்வு நாட்களுக்கு முன்பாக கட்டாயம் 5 நாட்கள் பணி செய்திருக்க வேண்டும் எனவும், வாராந்திர ஓய்வுக்குச் செல்லும்முன் தங்கள் மேலதிகாரியிடம் அனுமதிபெற்றுச் செல்ல வேண்டும் எனவும், எக்காரணத்தைக் கொண்டும் வாராந்திர ஓய்வை நீட்டிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.