25-ம் தேதி மு.க.ஸ்டாலினைச் சந்திக்கிறார் துரை வைகோ!


துரை வைகோ

மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ள வைகோவின் மகன் துரை வைகோ, வரும் 25-ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கிறார்.

மகனுக்கு அரசியல் வேண்டாம் என வைகோ சொன்னாலும், அவரது கட்சிக்காரர்கள் விடுவதாக இல்லை. துரை வைகோவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த அவர்கள், இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

துரை வைகோவுக்கு கட்சிப் பதவி கொடுப்பதில் கொங்கு பகுதி மதிமுகவில் மாற்றுக் கருத்து நிலவுவதாக, ஏற்கெனவே நாம் சொல்லி இருந்தோம். இந்த நிலையில், துரைக்கு கட்சிப் பதவி வழங்குவது தொடர்பாக நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் எதிராக 2 ஓட்டுகள் பதிவாகி இருக்கின்றன. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாததும் முக்கியமாக கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில், கட்சியின் தலைமைக் கழக செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள துரை வைகோ, வரும் 25-ம் தேதி காலையில் பெரியார், அண்ணா நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு கட்சியின் தலைமையகமான தாயகம் சென்று, தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்பை முறைப்படி ஏற்றுக் கொள்கிறார். அன்று மாலையே மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெறுகிறார் துரை வைகோ.

x