புதுச்சேரியில் பாஜக தோல்விக்கு மாநிலத் தலைவர் செல்வகணபதியே காரணம்: சுவாமிநாதன் குற்றச்சாட்டு


சுவாமிநாதன் | செல்வகணபதி

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் தோற்றதற்கு மாநிலத் தலைவர் செல்வகணபதி தான் காரணம் என்று முன்னாள் மாநில தலைவர் சுவாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. இதுபற்றி பாஜக முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் இன்று வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சிக்கு அமைப்பு ரீதியாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி கிளை, தொகுதி, மாவட்டம் மற்றும் மாநிலத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தோடு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்

பொறுப்பேற்ற அனைவரும் திறமையாக செயல்பட்டு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் கடுமையாக பணியாற்றி தேசிய தலைவர் சீரிய ஆதரவுடன் புதுச்சேரி மாநில சட்டசபைக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அதனால் கூட்டணி ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி பங்கு பெற்றது. தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்களும், முழுமையான மக்கள்நல பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள சம்பளங்கள் மற்றும் ஏழாவது ஊதிய குழு நிலுவைத் தொகை, முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது.

நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த வேலை வாய்ப்புகள் நேர்மையான முறைகளில் நிரப்பப்பட்டு மக்கள் விரும்பும் நல்ல அரசாங்கம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் திடீரென்று பாஜக கட்சித் தலைமைப் பொறுப்பேற்ற தற்போதைய பாஜக தலைவர் செல்வகணபதி தன்னுடைய மோசமான நிர்வாகத் திறமையால் காலங்காலமாக பாரதிய ஜனதா கட்சிக்கு சித்தாந்த ரீதியாக தன்னலமில்லாமல் செயல்பட்ட எண்ணற்ற அனுபவ நிர்வாகிகளை நீக்கிவிட்டார்.

கிளை மற்றும் கேந்திரத்தை கலைத்து விட்டு சுயநலத்தோடு தன்னுடைய சொந்த நிறுவனம் போல் கடந்த ஆறு மாதங்களாக கட்சியை தவறாக வழி நடத்தி முதல் முறையாக ஆளுங்கட்சியில் அமைச்சராக உள்ள ஒரு வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதற்கு புதுச்சேரி தலைவர் செல்வகணபதியே முழுகாரணம். எனவே தார்மீக பொறுப்பேற்று மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியில் கடந்த முறை லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எட்டாயிரத்திற்கும் அதிகமாக வாக்குகள் வாங்கி இரண்டாம் இடத்திற்கு வந்த என்னை தேர்தலில் பணியாற்ற விடாமல் சதி செய்து லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக புறக்கணித்து ‘என் தொகுதி நான் வைத்தது தான் சட்டம்’ என்று சுயநலமாக சிந்தித்து மட்டுமல்லாமல் பல நிர்வாகிகளை தொகுதியில் வேலை செய்ய விடாமல் தடுத்து புதுச்சேரியின் பாராளுமன்ற உறுப்பினரை காங்கிரஸுக்கு தாரை வார்த்த பெருமை செல்வகணபதியே சேரும். கட்சியின் எதிர்கால நலன் கருதி உடனடியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

மேலும், இது சம்பந்தமாக தேசிய தலைமை ஆய்வு செய்ய வேண்டும். ஒட்டு மொத்தமாக ஆயிரக்கணக்கான பழைய நிர்வாகிகளை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு சித்தாந்த ரீதியாக இல்லாமல் புதியவர்களை நியமித்து தனக்குத்தானே மாபெரும் தலைவர் என்று நினைப்பது சரியல்ல.

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு தலைவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்து பாரதி ஜனதா கட்சியை படிப்படியாக வளர்த்தார்கள். ஆனால் இன்று செல்வகணபதி பாரதிய ஜனதா கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றாமல் குறுக்கு வழியில் நியமன சட்டமன்ற உறுப்பினர், ராஜ்யசபா உறுப்பினர், மாநில பொருளாளர், மாநில தலைவர் என்று எந்த வேலையும் செய்யாமல் கட்சி பலனை அனுபவித்து ஒட்டுமொத்த கட்சிக்கு துரோகம் விளைவித்த மாநில தலைவரை உடனடியாக தேசிய தலைமை மாற்ற வேண்டும் ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.