கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு!


சென்னை: பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சென்னை, கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஆற்காடு, ஆரணி வழியாக 44 பேருந்துகளும் மற்றும் காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக 11 பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன.

ஆனால், திருவண்ணாமலை செல்லும் பயணிகளில் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு சந்தை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை வழித்தடப் பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் மே 23-ம் தேதி முதல் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு நாள்தோறும் கூடுதலாக 30 பேருந்துகள் என மொத்தம் 85 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.