விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 20,000 போலீஸ்


கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு சார்பில் அனைத்து மதம் சார்ந்த பண்டிகைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் விநாயகர் சிலைகளை 3 அடிக்கு மிகாமல் பொதுமக்கள் வீட்டிலேயே வைத்து வழிபட வேண்டும் எனவும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவோ, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மேலும் சென்னையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை சிலைகளைக் கரைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளைத் தனி நபராகச் சென்று நீர் நிலைகளில் கரைக்கவும், அப்படி இயலாதவர்கள் அருகிலுள்ள ஆலயங்களில் சிலைகளை வைத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்து நீர்நிலைகளில் கரைக்க அறநிலையத்துறை சார்பில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விழாக் காலங்களில் கடைத் தெருக்களுக்கு வரும் பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடக்க அரசு மற்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு வழிகாட்டுதல்களை மீறிச் செயல்படும் அமைப்புகள், தனி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்தவித அசாம்பாவிதம் ஏற்படாத வகையில் சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாநகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாகச் சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x