“இத்துடன் என் அரசியல் களம் நிற்காது” - தங்கர்பச்சான் கருத்து @ கடலூர்


கடலூர்: கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் நேற்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் பிரச்சாரத்துக்கு மக்க ளைச் சந்திக்க 22 நாட்கள் மட்டுமே கிடைத்தது, முழு காய்ச்சலுடன் மக்களைச் சந்தித்தேன். கடலூர் மாவட்டத்தின் தீராத பிரச்சினைகளை தீர்க்கவே தேர் தல் களம் கண்டு தேர்தலில் 2 லட்சத்து 5 ஆயிரம் வாக்குகள் பெற்றேன். என்னை நம்பி வாக்க ளித்த மக்களுக்கு நன்றி.

அதிகாரம் இருந்ததால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். இத்துடன்‌ என் அரசியல் களம் நிற்காது. கடந்த முறை தமிழக மக்கள் வெற்றி பெற வைத்த, 38 பேரால் நாட்டுக்கு கிடைத்தது என்ன? உங்கள் தொகுதியின் எம்.பி உங்களுக்கு என்னசெய்தார்? மீண்டும் அக்கூட்டணியே வந்ததன் மூலம், உங்களுக்கு அரசியல் விடுதலை எப்படி கிடைக்கும்? அரசியல் புரிதல் மக்களுக்கு இல்லாததே இந்த தேர்தல் முடிவுக்கு காரணம்.

அண்ணாவையும், பெரியாரையும் இன்னும் எவ்வளவு நாட்கள் சொல்லி ஏமாற்றுவார்கள்?மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்துக்கு நன்மை. என் மொழி, மண், இனத்திற்கு எந்த சிக்கல் வந்தாலும் போராடுவேன் என் அரசியல் பங்களிப்பு தொடரும்” என்று தெரிவித்தார்.