தஞ்சாவூர்: பாரம் தாங்காமல் பாலம் இடிந்து வாய்க்காலில் சிக்கிய லாரி


தஞ்சாவூர்: தஞ்சை அருகே பாசன வாய்க்காள் மேல் உள்ள பாலத்தில் லாரி சென்றதால் அந்தப் பாலம் இடிந்து லாரியும் வாய்க்காலில் சிக்கிக் கொண்டது. இதனால் விவசாய பணிகளுக்குச் செல்ல முடியாது விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

தஞ்சாவூர் மாவட்டம் அன்னப்பன்பேட்டையில் மெலட்டூர் அ பிரிவு பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த பாசன வாய்காலில் அமைந்துள்ள பாலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தப் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளை நிலங்கள் அமைந்துள்ளது. இந்த நிலங்களுக்கு நடவு இயந்திரம், அறுவடை இயந்திரம், டிராக்டர் வாகனங்களை கொண்டு செல்வதற்கு விவசாயிகள் இந்த பாலத்தைப் பயன்படுத்தி வந்தனர். பாலம் கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆனதால், பாலம் வலுவிழந்த பழுதடைந்துள்ளது.

இதனால் பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலை ஏற்பட்டதால் உடனடியாக பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் பலமுறை புகார் மனு அளித்தனர். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில் இன்று காலை மூங்கில் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று அந்தப் பாலத்தைக் கடக்க முயன்ற போது பாரம் தாங்காமல் பாலம் இடிந்து உள்வாங்கியது. இதனால் லாரி பாலத்தின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது.

இதனால் விவசாய பணிகளுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இனியும் இதுபோல சிக்கல்கள் வராமல் இருக்க அதிகாரிகள் உடனடியாக பாலத்தைப் பார்வையிட்டு புதிதாக பாலத்தைக் கட்டிக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.