சென்னையில் கொட்டி தீர்த்த மழை


சென்னையில் வெயில் ஒருபுறம் வாட்டி வதைக்கும் நிலையில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் நேற்று பெய்த மழையில் சென்ற வாகனங்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவானது. தற்போது தென்மேற்கு பருவ மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.

அதன்படி, நேற்று பிற்பகல் 2:30 மணிக்குதொடங்கிய கனமழை மாலை வரை விடாமல் பெய்தது. சென்னை வடபழனி, சாலிகிராமம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், தரமணி, வேளச்சேரி, எழும்பூர், புதுப்பேட்டை, வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பாடி, கொரட்டூர், தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது. மாலை நேரத்திலும் ஆங்காங்கே லேசாக மழை பெய்தது.

இவ்வாறு திடீரென பெய்த மழையால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்ட நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவானது.