திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தமிழக அளவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி


திருவள்ளூர்: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், தமிழக அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில், சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்), கு.நல்லதம்பி (தேமுதிக), பொன்.வி.பாலகணபதி (பாஜக), மு.ஜெகதீஷ் சந்தர் (நாம் தமிழர் கட்சி), து.தமிழ்மதி (பகுஜன் சமாஜ் கட்சி) உள்ளிட்ட 14 பேர் போட்டியிட்டனர்.

2,256 வாக்கு சாவடிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் பதிவான 14,30,738 வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன் தினம் திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு, தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

34 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில், தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலையில் இருந்து வந்தார். அவர், வாக்கு எண்ணிக்கை முடிவில், 7,96,956 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சசிகாந்த் செந்தில், பாஜகவேட்பாளர் பொன்.வி.பாலகணபதியை விட 5,72,155 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வாக்கு வித்தியாசம் தமிழக அளவில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சசிகாந்த் செந்திலை எதிர்த்து போட்டியிட்ட 13 பேரில்,பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி 2,24,801 வாக்குகள் பெற்று2-ம் இடமும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 2,23,904 வாக்குகள் பெற்று 3-ம் இடமும், நாம் தமிழர்கட்சி வேட்பாளர் எம்.ஜெகதீஷ்சந்தர் 1,20,838 வாக்குகள் பெற்று 4-ம் இடமும் பெற்றனர்.

2-ம் இடம் பிடித்த பாஜக வேட்பாளர் உட்பட சசிகாந்த் செந்திலை எதிர்த்து போட்டியிட்ட 13 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.