மாரியம்மன் கோயிலில் சரத்குமார் அங்கப்பிரதட்சிணை செய்து வழிபாடு


விருதுநகர்: விருதுநகரில் உள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில் நடிகர் சரத்குமார் அங்கப்பிரதட்சிணை செய்து வழிபாடு செய்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா போட்டியிட்டார். தேர்தலின்போது வேட்பாளர் ராதிகா மட்டுமின்றி அவரது கணவரும் நடிகருமான சரத்குமாரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக விருதுநகரில் உள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர் பிரச்சாரத்தைத் தொடங்கினர்.

இந்நிலையில், நாளை (4-ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், பாஜக வேட்பாளர் ராதிகாவும், அவரது கணவர் சரத்குமார் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலான காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். அவர்களுடன் மகன் ராகுலும் உடனிருந்தார். அடுத்த மாதம் மகள் வரலட்சுயின் திருமணம் நடைபெற உள்ளதால் திருமண அழைப்பிதழை கோயிலில் வைத்தும் வழிபட்டனர்.

அதைத்தொடர்ந்து, நேற்று இரவு விருதுநகரில் உள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில் ராதிகாவும், சரத்குமாரும் வழிபாடு நடத்தினர். அப்போது, கோயிலில் அங்கப்பிரதட்சிணை செய்து சரத்குமார் வழிபட்டார். அப்போது, பாஜக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.