இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநராக சி.ஜி.கர்ஹட்கர் பொறுப்பேற்பு


இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக பொறுப்புள்ள விஞ்ஞானி சி.ஜி.கர்ஹட்கர்.

கல்பாக்கம்: கல்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக சி.ஜி.கர்ஹட்கர் இன்று இயக்குநர் அலுவலகத்தில் பதவியேற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை அணுமின் நிலையம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அணுமின் நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், முதன்மையாக கருதப்படும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பதவி முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில், மேற்கண்ட அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருந்த வெங்கடராமன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, புதிய இயக்குநராக பாபா அணு ஆராய்ச்சி மையத்தின், அணு உலை குழுமத்தில் விஞ்ஞானி மற்றும் இயக்குநராக உள்ள சி.ஜி. கர்ஹட்கர் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், புதிய இயக்குநர் பதவியேற்கும் நிகழ்ச்சி இயக்குநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், விஞ்ஞானி சி.ஜி.கர்ஹட்கர் இயக்குநராக பதவியேற்றார். புதிய இயக்குநரான சி.ஜி.கர்ஹட்கர், கடந்த 1987-ம் ஆண்டு இயந்திரப் பொறியாளர் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.

மேலும், மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பயிற்சி பள்ளியில் 31-ம் திரளில் பட்டம் பெற்றார். கடந்த 1988-ம் ஆண்டு மும்பையின் ட்ராம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணு உலை செயல்பாட்டு பிரிவில் சேர்ந்தார். மேலும், கடந்த கடந்த 36 ஆண்டுகளில் பிஏஆர்சி-ல் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.

பாபா அணு ஆராய்ச்சி உலை குழுமத்தின் இயக்குநரான இவர், ஆராய்ச்சி அணு உலைகளின் பாதுகாப்பான மற்றும் திறமையான இயக்கம், பயன்பாடு, அணு உலை நீக்கம் மற்றும் புதிய அணு உலைகளுக்கான திட்டமிடல் ஆகியவற்றின் ஒட்டுமொத்த பொறுப்பாளராக உள்ளார். துருவா அணு உலையின் எரிபொருள் செயல் திறனை மேம்படுத்துவதில் இவர் பெரும் பங்களித்துள்ளார்.

தேசிய விற்பனையாளர்களுடன் தொடர்புடைய பொருட்களை மேம்படுத்துவதற்காக கலந்துரையாடுவது. உற்பத்தி முறையை ஆராய்ந்து மேம்படுத்துவது, இறுதியாக துருவா ஆய்வு அணு உலையில் நீடித்த வகையில் முழு ஆற்றலுடன் இயக்குவதற்கு மிகவும் பொறுப்பாக இருந்தார். மேலும், பல்வேறு பாதுகாப்பு மேம்படுத்துதலுக்கு வழிகாட்டி செயல்படுத்தியுள்ளார்.

மேலும், இவரது தலைமையின் கீழ் கதிர்வீச்சின் விளைவு மற்றும் நிதி ஒதுக்கீட்டின் சம நிலையை வைத்து நாட்டிலேயே முதல் முறையாக சைரஸ் (Cirus) போன்ற பெரிய அணு உலைக்கான அணு உலை நீக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. பொருட்களின் கதிர்வீச்சு பண்புகளுக்கான தரவுத் தளத்தை உருவாக்குவதற்கு சைரஸ் அணு உலையிலிருந்து தரவுச் செயலாக்கத்திற்காக ஒரு செயல்முறையை நிறுவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.