யானைகள் வழித்தடம் குறித்த வரைவு அறிக்கை: அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை


பிரதிநிதித்துவப் படம்

கோவை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காட்டு விலங்குகள் அதிகளவில் வனத்தை விட்டு வெளியே வந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, குடியிருப்புப் பகுதிகளிலும் நுழைந்து மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றன.

மலையையொட்டி பொழுது போக்கு மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல வகை கட்டிடங்கள் உருவாவதாலும், அதனால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாலும் அவை வனத்தை விட்டு வெளியே வருகின்றன. இச்சூழலில், தமிழக அரசின் சார்பில் யானை வழித் தடங்கள் குறித்த 161 பக்க வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளதால் விவசாயிகள் படித்து கருத்து தெரிவிப்பதில் பிரச்சினைகள் உள்ளன.

இதற்கு பதில் தெரிவிக்க உரிய கால அவகாசமும் வழங்கப்படவில்லை. யானைகள் வழித்தடம் குறித்து விவசாயிகள், குடியிருப்பு வாசிகள் என யாரிடமும் எந்த கருத்துகளையும் குழுவினர் கேட்காமல் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கோவையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன் பாளையம், போளுவாம்பட்டி வனச்சரக பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் 520 ஏக்கருக்கு மேல் விவசாய பூமிகளை யானைகள் வழித்தடமாக கையகப்படுத்துவதை ஒரு தலைப் பட்ச நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம்.

இவை கையகப்படுத்தப்பட்டால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும். இந்த வரைவு அறிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சாலைகளில் மக்களைத் திரட்டி, கால்நடைகளுடன் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.